அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளராக பணிபுரியும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த யு.எஸ்.ரணவீர என்பவரே இந்த மனுவை சமர்ப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும் தாம் வரி செலுத்துபவர் எனவும், அரசாங்கம் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் 21ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியுள்ளதாகவும் மனுதாரர் கோரியுள்ளார். உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஒருவர் வரி செலுத்த வேண்டிய மாத வருமான வரம்பு இரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மீது செலுத்த முடியாத வரிச்சுமை சுமத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதாகவும் மனுவில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது ஏற்றுமதி, உள்ளூர் கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற துறைகளை ஊக்கப்படுத்துவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தேச மசோதாவில் உள்ள விதிகள், அரசியலமைப்பின் கீழ் மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் கடமையின் விதிகளை கடுமையாக மீறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் 15, 16 மற்றும் 22, 29, 36 மற்றும் 39 போன்ற பிரிவுகளில் உள்ளடக்கங்களானது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானவை என்றும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வழங்குமாறும் மனுதாரர் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளார்.