பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
மேலும், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்கள் மற்றும் ஏனைய நகரங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அத்தோடு, இந்நாட்களில் மத வழிபாடுகள் நடைபெறுவதால் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மத வழிபாடுகளின் போது இனந்தெரியாத நபர்கள் வருவார்களா என்பதை அறிய தேவாலய நன்கொடையாளர் சபையுடன் கலந்தாலோசித்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சிவில் உடையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தவிர ஏனைய மாகாணங்களில் இருந்தும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேல் மாகாணத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் மேலும், போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பண்டிகைக் காலங்களில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.