பணவீக்கத்தின் வீழ்ச்சி தொடர்ந்தும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் பாதியில் பணவீக்கம் மேலும் குறைந்து 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விரும்பிய பணவீக்க அளவை எட்டும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருந்தால், உரிய கொள்கை நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 மற்றும் அதற்குப் பின்னரான காலத்திற்கான நாணய மற்றும் நிதித் துறைக் கொள்கை தொடர்பான விசேட அறிக்கையை வெளியிடும் போதே மத்திய வங்கி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8 வீதத்தால் சுருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளதோடு, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரம் படிப்படியாக மீளும் என்றும் அதன் பின்னரும் வளர்ச்சி விகிதம் தொடரும் என்றும் மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
மேலும், இலங்கையின் கடனாளிகளுடனான கலந்துரையாடல்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் சர்வதேச நாணய நிதியம் வழங்கும் வசதி 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெறப்படும் என்றும் மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.