இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக புளூம்பெர்க் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளதோடு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய அரசு நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அந்த இணையதளம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடன் மறுசீரமைப்பில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள இந்திய அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி, ப்ளூம்பெர்க் இணையதளம் இதுவரை எந்த கூடுதல் தகவலும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 12 மணித்தியாலங்களில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை இலங்கை பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இலங்கைக்கான கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், சீனா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகளிடமிருந்து கடன் மறுசீரமைப்பு சான்றிதழை இலங்கை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.