மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான நடுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட மிரிஹான உப பிரிவில் கடமையாற்றும் நபர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பிடகோட் பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை கைது செய்து சோதனையிட்டதன் பின்னர், அவரிடமிருந்த 64 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகநபருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளின் தலையீட்டில் மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் ஊடாக குறித்த ஐஸ் வியாபாரிக்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் மற்றும் தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் சந்தேகநபர் இரண்டு கையடக்க தொலைபேசிகளுடன் மிரிஹான பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது குரு டிவி செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.