தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில் இலங்கை தொடர்பில் தவறான பிம்பத்தை உருவாக்க முடியும் என பஃவ்ரல் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தலை நடத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு சர்வதேச ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி.திவரத்ன மற்றும் கே.பி.பி.பத்திரன ஆகியோருக்கு கடந்த 19ஆம் திகதி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம்.முகமதுவுக்கும் நேற்றுமுன்தினம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம் சார்லஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா? என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.