நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகத்தின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த சதாம் டி10 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
அணிக்கு 11பேர் கொண்ட 10ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 32 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றி இறுதி சுற்றுக்கு நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகமும், கல்முனை லெஜன்ட்ஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை லெஜன்ட்ஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர் நிறைவில் 05 விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்களை பெற்றன. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 9.5 ஓவர் நிறைவில் 02 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சீ.பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.வெற்றிபெற்ற இம்ரான் விளையாட்டுக் கழகத்திற்கு முப்பதாயிரம் ரூபாய் காசோலையும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப்பெற்ற லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு இருபதாயிரம் ரூபாய் காசோலையும் கிண்ணமும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.