(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு தேசியப் பல்கலைக் கழகமாக மிளிர்ந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக்கள் நிறைய இருக்கின்றது என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தனது முதல் விஜயத்தினை (14) ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொண்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் உபவேந்தர் காரியாலயத்தில் இடம்பெற்ற இவ்வரவேற்பு நிகழ்வில், பீடாதிபதிகள், நூலகர், பதிவாளர், நிதியாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் இங்கு கலந்து கொண்டனர்.
மேலும், இங்கு உரையாற்றிய வேந்தர் பாயிஸ் முஸ்தபா அவர்கள் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழம் என்பதற்கும் அப்பால் இலங்கை தேசத்தினுடைய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பல்லினங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினருக்கான வசதி வாய்ப்புக்களும் சிறப்பாக வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.
அவற்றினை எதிர்காலத்தில் விருத்தி செய்வதற்கு உபவேந்தருடன் இணைந்து செயற்படுவோம்.
பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான கற்கையினை மேலும் விரிவுபடுத்துதல், ஆங்கில மற்றும் தொழில்நுட்ப ஆற்றல்களை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் விருத்திசெய்வதன் மூலம் அவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றவர்களாக உருவாக்குதல் வேண்டும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றினை நிறுவுவதற்காக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தன்னால முழு ஒத்துழைப்பினையும் வழங்குவேன் என்றும் கூறினார்.
நிகழ்வில் புதிய வேந்தருக்கான நினைவுச் சின்னத்தினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களால் வழங்கிவைத்தார்.
இங்கு பல்கலைக்கழக சுற்றுச்சூழலினை பார்வையிட்ட புதிய வேந்தர், பல்கலைக்கழத்தின் கலாநிதி அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நூலக வசதிகளையும் கண்டறிந்து கொண்டடார்.
மேலும், வேந்தர் பாயிஸ் முஸ்தபாவுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினுடைய பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமித் அவர்களும் இந்நிகழ்வில் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.