நூற்புழு நோயால் நாசமான வயல்களுக்கு அரசாங்கம் ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்க வேண்டும் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நூற்புழு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தத் தருணத்தில் எடுத்தால் எந்தப் பலனும் கிடைக்காது எனவும் அரசாங்கம் பெற்ற பணத்தை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்றும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கையை பாதித்துள்ள நூற்புழு நோய்க்கு இயற்கை விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் தரமற்ற சேதன உரங்களைப் பயன்படுத்துவதே காரணமா என்பது குறித்து விவசாயத் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
அத்தோடு, இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் பின்னர் பல்வேறு நிறுவனங்களினால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் கரிம உரங்கள் முறையான தரமில்லாததாக சந்தேகிக்கப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ஏற்கனவே பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட உர மாதிரிகளில் பல நூற்புழுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.