முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிடுமாறு கோரியே முன்னாள் ஜனாதிபதி மனு தாக்கல் செய்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த போதிலும் மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பிராங்க் குணவர்தன இந்த உத்தரவை வெளியிடுவதை மார்ச் 1ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.
இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.