முப்பது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மரக்கட்டைகளை போலி அனுமதிப்பத்திரத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இரவோடு இரவாக கொள்கலன் பெட்டி பொருத்தப்பட்ட லொறியில் மில்லா மற்றும் தேக்கு மரங்களை இரகசியமாக ஏற்றிச் சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இங்கிரிய தள வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, தள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முப்பத்தெட்டு மற்றும் நாற்பத்து மூன்று வயதுக்கு இடைப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவர்கள் சம்மாந்துறை அக்கரப்பற்று பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு இந்த மரக்கட்டைகளை எடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபர்கள், கொழும்பு பிரதேசத்தில் உள்ள மர விற்பனையாளர்களுக்கு மொத்தமாக மரங்களை விநியோகிக்கும் மர கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுவதாக தள வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சந்தேகநபர்களிடமுள்ள மாற்றப்பட்ட அனுமதிப்பத்திரம் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.