நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டில் அராஜகத்திற்கு இடமளிக்காமல் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் இடம்பெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரோட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீண்டு வருமென நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் ஜனநாயகத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும் சமூகமொன்று நாட்டில் கட்டியெழுப்பப்படும் என உறுதியளித்தார்.
இதன்படி, மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் மூலம், மக்கள் இனியும் துன்பப்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும், அதற்கான அனைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு, ஜனநாயகத்தை போற்றும் தலைவர் என தெரிவித்த ஜனாதிபதி, ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை எனவும், அதற்கு சட்ட ஒழுங்கை பேணுவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒரு நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது எனவும், ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த வருடம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம், மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி, நாட்டில் உருவாக்க வேண்டிய மாற்றங்களையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதற்குத் தேவையான பின்னணி தயார் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.