பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்று நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமை தொடர்பில் பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நேற்று இடம்பெற்ற மனிதாபிமானமற்ற, பயங்கரமான, வன்முறைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் விரிவுரையாளர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, பொலிஸாரினரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டு நடத்திய இந்தத் தாக்குதலால் பல்கலைக்கழக சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்வதில் உறுதி பூண்டுள்ள சட்ட பீட விரிவுரையாளர்கள், அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் மக்களின் உரிமை மீறலை வன்மையாக நிராகரிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து கருத்துகளை வெளியிடும் சூழலாக உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உரிமைகள் பறிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.