எரிபொருள் விலையேற்றம் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில், அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
லங்கா IOC நிறுவனம் கடந்த முறை எரிபொருள் விலையை அதிகரித்த சந்தர்ப்பத்தில், அதன் பணிப்பாளர் சபையை அழைத்து, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துடன் இணைந்ததான விலையில் எரிபொருளை விற்பனை செய்யுமாறு வலியுறுத்தியதாக அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அனைத்து விதமான பெற்றோலின் விலைகளையும் அதிகரித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில், IOC நிறுவனத்துடனான உடன்படிக்கையை ஆராயுமாறு, தான் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
உடன்படிக்கை ஆராயப்பட்டதன் பின்னர், அது தொடர்பிலான பத்திரமொன்றை எதிர்வரும் அமைச்சரவையில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்தாலும், தற்போதைக்கு பெற்றோலிய கூட்டுதாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது எனவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறுகின்றார்.