நூருல் ஹுதா உமர்
மக்கள் கிளர்ச்சியினை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் குறிப்பிட்டுள்ளார். மிரிகானையில் நேற்று இரவு இடம்பெற்ற போராட்டத்தின் பின்னால் அடிப்படைவாதிகள் இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்திருப்பது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ,மின்சாரம் ,கேஸ் ,உணவு பொருட்கள் என அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் எதிர்கொள்ளுகின்ற இன்னல்களை பொறுக்கமுடியாமல் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குகின்ற நிலை வந்திருக்கின்றது. இதன் ஆரம்ப கட்டமே நேற்று மிரிகானையில் இடம்பெற்ற போராட்டமாகும் .
இன்னும் நாட்கள் செல்ல செல்ல நிலை இன்னும் மோசமாகலாம்.
ஆனால் மக்களுடைய கிளர்ச்சியினை அடிப்படைவாதம் என்ற பெயரில் அரசாங்கம் திசை திருப்ப முயல்கிறது.அடிப்படைவாதம் பேசி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றதன் சாபத்தையே இந்த அரசு இப்போது அறுவடை செய்கின்றது.ஆனால் இதில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் அடிப்படைவாதம், மதவாதம் பேசி மக்கள் போராட்டத்தினை அரசு திசை திருப்ப முயல்வது நிலமையினை இன்னும் மோசமாக்கும் விடையமாகும்.
அடிப்படைவாதத்தை தான் ஆட்சிக்கு வந்து அழித்துவிட்டதாக ஜனாதிபதி அடிக்கடி கூறி இருக்கின்றார். ஆனால் இன்று அவருக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்து எழுந்த போது மீண்டும் அடிப்படைவாதத்தின் பெயரை கூறி அவர் தப்பிக்க முயல்வது ,யார் அடிப்படைவாதத்தின் பின்னால் உள்ளார் என்பதை எடுத்து காட்டுகிறது.
பட்டினியால் வாடுகின்ற மக்களுக்கு இங்கு அடிப்படைவாதம் சோறு போடாது என்பதை பெரும்பான்மை மக்கள் உணர்ந்துவிட்டனர்.
ஆகவே மிரிகானையில் ஆரம்பித்த மக்கள் கிளர்ச்சியினை அடிப்படைவாதம் பேசி யாராலும் தடுக்க முடியாது. ஆகவே அடிப்படைவாதத்துக்கு பின்னால் ஜனாதிபதி ஒழிந்து கொள்ளாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய நாட்டினை உருவாக்க வேண்டும். இல்லாமல் போனால் இதைவிட பாரிய போராட்டங்களை நாடு முழுவதும் நடைபெறும் என்பதினை அரசு உணர வேண்டும் என குறிப்பிடடார்.