பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (29) கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்குவதுடன் அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை நியமிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
கட்சி பிரதிநிதிகள் முன்வைத்துள்ள பொதுவான பிரேரணைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் அதில் உள்ள விடயங்களுக்கு தான் உடன்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொறிமுறையை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களில் ஐந்து பிரதிநிதிகளை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்று முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.