முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் செயற்படுவதில்லை என அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அத்தோடு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோரி பல்வேறு தரப்பினரால் 10 மனுக்களும், மேன்முறையீட்டு நீதிமன்றில் 10 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தகவல்களை மீள் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலமும் முடிவடைந்துள்ளதாகவும், நியமன அதிகாரசபை அதன் பதவிக் காலத்தை மேலும் நீடிக்காததால், ஆணைக்குழுவும் இவ்வாறு மாறியுள்ளதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தகவல்களை முன்னெடுப்பதில்லை என அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் மீளத் தாக்கல் செய்வதற்கான உரிமையை மனுதாரர்களுக்கு வழங்கி மனுக்களின் விசாரணையை முடிக்குமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாக்கல் செய்த மனுவுக்கு ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பில் ஆஜரான ரொமேஷ் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள், இந்த பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்குமாறு நீதிமன்றத்திடம் உத்தரவு பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மனு மீதான விசாரணைக்கு திகதி குறிப்பிடும்படி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதோடு அந்தந்த மனுக்களின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த மனுக்களை மார்ச் 1ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டுள்ளது.