ஓமானில் உள்ள வேலைகளுக்கு இலங்கை பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள நடைமுறை தாமதங்களை தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு துறையை டிஜிட்டல் மயமாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்கள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஓமானுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு, தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில் எடுக்கப்படும் அனுமதிகளை பெற்றுக்கொள்ள தூதரகத்திற்கு நேரில் வருவதற்கு நீண்ட தூரம் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் தொழிலாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் பற்றாக்குறையால், அனுமதி பெறுவதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அதற்குப் பதிலளித்த அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, தொலைதூரத்தில் காணொளி தொழில்நுட்பம் மூலம் நேர்காணல் நடத்திய பின்னரே வீட்டு வேலையாட்களை பணியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.