
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நாட்டிற்கு வந்த முதலாவது சீனா சுற்றுலாப் பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும், 181 சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு 07 நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, இன்று மாலை 06.51 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் MU-231 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமையே, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனாத் தூதுவர் Qi Zhen Hong மற்றும் ஸ்ரீ சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், சீனாவின் ஷாங்காய் மற்றும் குன்மிங் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் 06 விமானங்கள் சீனா சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என தெரிப்பிக்கப்படுகின்றது.
இதன்படி, முன்னதாக மார்ச் 01 அன்று, சீனாவின் குவாங்சோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 117 சுற்றுலாப் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் அவர்கள் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த முதல் சுற்றுலாப் பயணிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.