இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நிறுவன மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் அனைத்து தரப்பு மக்களினதும் மனித உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு தேசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் கடந்த காலங்களில் மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் அடிப்படை மாற்றங்கள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் அமைதியான போராட்டங்களை ஒடுக்குதல் மற்றும் இராணுவமயமாக்கல் போக்கை மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான உண்மையைக் கண்டறிய எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மனித உரிமைகள் அலுவலகம் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.