அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக சுற்றறிக்கையில் திருத்தம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தியாவின் முதலீட்டு ஒத்துழைப்பின் அடிப்படையில் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் மற்றும் முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரைகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வழங்கினார்.
இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் அவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
இந்திய முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் எழுந்துள்ள தடைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
முன்னைய அரசாங்கங்கள் அவ்வப்போது வெளியிட்ட சுற்றறிக்கைகளில் உள்ள ஏற்பாடுகள் அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பின் அவற்றை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.