கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து பதிவாகும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இருந்து மனநோயாளிகளின் அறிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாகவும் இதில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்றும்வெளிநாட்டு ஊடகங்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அத்தோடு, ஹெராத் மாகாண வைத்தியசாலையின் மனநலப் பிரிவு அறிக்கையின்படி, ஒவ்வொரு வாரமும் சுமார் 100 நோயாளிகள் மனநோய்களுக்கு சிகிச்சை பெற வருவதாகக் கூறப்படுவதோடு, கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 400 நோயாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்துள்ளதாக அந்த மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வேலையில்லாத் திண்டாட்டம், குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகள், பெண்களுக்கான பள்ளி, பல்கலைக் கழகக் கல்வியைத் தடை செய்தல் போன்ற கடுமையான விதிகளை தாலிபான் ஆட்சியால் திணிப்பது போன்றவை மனநோய்கள் அதிகரிப்பதற்குக் காரணம் எனவும் ஆப்கானிஸ்தானில் நெருக்கடி நிலை மற்றும் துன்ப நிலை தொடருமானால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும், அதிகரிக்கும் என அந்நாட்டு மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.