இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அண்டை நாடான இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் பிரதான ஆதரவாளராக இந்தியா இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு ஏனைய நாடுகள் முன்வந்துள்ள போதிலும், இந்தியா ஏற்கனவே இலங்கைக்காக பலவற்றை செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவும் ஜப்பானும் இலங்கைக்கு கடன் வழங்கும் பிரதான நாடுகள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, சீனாவிடம் கடனுதவி பெற்று இலங்கை தவறிழைத்துள்ளதா என நேர்காணலில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினர்.
இலங்கை சில நிபந்தனைகளைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத் துறையின் அபிவிருத்தியில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை உதாரணமாகக் காட்டி, நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் தனது முக்கிய சொத்துக்களை தனியார் மயமாக்கும் தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக ஊடகவியலாளர் பிரதமரிடம் வினவினார். அங்கு, இந்தியா ஏன் ஏர் இந்தியாவை விற்கிறது என்று அவரிடம் பிரதமர் கேட்டார்.
ஶ்ரீலங்கன் விமான சேவையானது நஷ்டத்தில் உள்ளதாகவும், நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் மேலதிக உதவிகளை வழங்க முடியாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது ராஜபக்ச குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என நேர்காணலில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதமர், அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றார்.
இது ராஜபக்சக்களுக்கு மாத்திரம் அல்ல எவருக்கும் பொருந்தும் எனவும், சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினரும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.