மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவதுடன் வீட்டிலிருந்தும் கடமைகளை முன்னெடுப்பது அவசர தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்களை பதிவு செய்தல், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் உட்பட பிற அரசாங்க முகவர் நிலையங்கள், அத்தகைய சேவைகளை மிகவும் திறமையாக வழங்குவதற்கு மேலும் பரவலாக்க முக்கிய நிறுவனங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விவசாயம், உணவுப் பாதுகாப்பு, அரச சேவைகளை வினைத்திறனாக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல், மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்கல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. உள்ளூர் அறுவடையில் 40% அழிக்கப்படுகிறது. இது தொடர்பில் அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசுக்கு சொந்தமான மற்றும் சாகுபடி செய்யப்படாத நிலங்களை கண்டறிந்து, சாகுபடி செய்ய ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முப்படைகளும், சிவில் பாதுகாப்புப் படையும், சிறைத் திணைக்களமும் .விவசாயத்திலும் அந்த நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான முடிவுகளை அடைய முடியும்.
இக்கலந்துரையாடலில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி குறித்தும் விவாதிக்கப்பட்டது. சூரிய மின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய மின் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான நிறுவன நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.