நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேற்று பிற்பகல் எரிபொருள் விடுவிப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் செய்தியே இதற்குக் காரணம்.
நாட்டிற்க்கான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் திகதியை சரியாக கூறமுடியாத நிலையில் தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விடுவிக்கப்படும். இவ்வாறு எரிபொருள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதன் காரணமாக வரிசைகளில் வீணாக காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் நடத்தப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று எடுத்த தீர்மானத்தின் பின்னணியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த வாரம் நடைபெறாத செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நகர்ப்புறங்களில் பாடசாலைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகள் எத்தனை நாட்களில் நடைபெறும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அதிபர்களுக்கு வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா என்பது குறித்து (செவ்வாய்க்கிழமை) தீர்மானம் எடுக்க கல்வி அமைச்சு தயாராகி வருகிறது.
அடுத்த வாரம் முதல் மூன்று நாட்களுக்கு நகரப் பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும் அது நடைமுறையில் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.