நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை இரண்டு மாதங்களுக்குள் நீக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரொக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக சில தரப்பினர் கூறுகின்ற போதிலும் அவ்வாறானதொரு நிலை இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார அமைச்சர் கெஹலிய ரொக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். 14 அத்தியாவசிய மருந்துகள் உட்பட மருந்துகள் மற்றும் உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. கையிருப்பு மருந்துகள் மற்றும் உபகரணங்களின் மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.