இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கோப் குழுவின் முன்னிலையில் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை மின் திட்டத்தை குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய அதானி நிறுவனத்தை அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து CEB அதிகாரிகளிடம் கோப் குழு கேள்வி எழுப்பியது. அப்போதுதான் அவர்கள் கோப் குழு முன் அழைக்கப்பட்டனர்.
கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் கேள்வி எழுப்பியதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.