எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பஸ் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவ்வப்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் பஸ் தொழில்துறை வீழ்ச்சியடைந்து வருவதாக பஸ் உரிமையாளர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமார் 10 வீதமான தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத தொடக்கத்தில் ஆண்டுதோறும் பேருந்து கட்டண திருத்தம் நடைபெறும். இவ்வாறானதொரு பின்னணியில் இந்த எரிபொருள் விலை அதிகரிப்பால் தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார். இதன்படி ஜூலை 01 ஆம் திகதி வரை பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு பழைய விலையிலேயே டீசல் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், பஸ் கட்டணத்தில் குறைந்தது 35 வீத திருத்தம் தேவை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.