எரிபொருள் விநியோகத்திற்காக உரிய நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கி ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நீண்டகாலமாக எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தை மீள வழங்குவதற்கு மத்திய வங்கி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி வழங்கவும், இதுவரையில் பின்பற்றப்பட்ட கடன் கடிதம் திறக்கும் நடைமுறை கிடைக்காத பட்சத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய தாய் நிறுவனங்களுடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் அடுத்த சில மாதங்களுக்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மத்திய வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் தாய் நிறுவனங்கள், சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நேரடி ஈடுபாட்டின் அவசியத்தை சுட்டிக்காட்டினர்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி அனுர திஸாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.