நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் வீடுகள் கடந்த மே மாதம் 9ஆம் திகதி எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுவின் வீடு மற்றும் இரண்டு வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான சந்தேக நபர் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் ஹோகந்தர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவங்கள் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தெரணம பொத்துஹெர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், மற்றைய சந்தேக நபர் கொழும்பு துறைமுக நகர வேலைத் தளத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சந்தேகநபர் கொதட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.