ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வழக்கை தீர்ப்பது தொடர்பாக தரப்பினர் கலந்துரையாடி வருவதாகவும், தீர்வு எட்டப்படாவிட்டால், தடை உத்தரவை நீடிப்பதற்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தனர்.
இதன்படி, பிரதிவாதியின் ஆட்சேபனைகளுக்கு உட்பட்டு நாளை மறுதினம் வரை தடை உத்தரவை நீடிப்பதற்கு தாம் எதிர்க்கவில்லை என சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதன்படி, பிரதிவாதியின் ஆட்சேபனைகளுக்கு உட்பட்டு, குறித்த தடை உத்தரவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, அன்றைய தினம் வழக்கு தொடர்பான பதில்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் மத்திய குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனவும், அரசாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அக்கட்சி வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நலனுக்காக அமைச்சுப் பதவியை ஏற்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதையடுத்து, சிரேஷ்ட உபதலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட பதவிகளில் இருந்து தம்மை நீக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, தம்மை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கவோ அல்லது இடையூறு செய்யவோ தடை விதித்து நிரந்தரத் தடை விதிக்கக் கோரி இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.