இன்று இலங்கை வரும் என அறிவிக்கப்பட்ட பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பல் இலங்கை கடற்பரப்பை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று கப்பல் இலங்கைக்கு வரும் என நம்பப்படுகிறது.
நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் கையிருப்பு விநியோகம் செய்யப்பட்ட போதிலும் சில பகுதிகளுக்கு இதுவரை பெற்றோல் கிடைக்கவில்லை. பெறப்பட்ட குறைந்த அளவிலான பெற்றோல் கூட வரிசையில் நிற்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பஞ்சிகாவத்தை சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாகவும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதன்படி கொஹுவல சந்தியில் இருந்து களுபோவில சந்தி வரையிலான ஒரு பாதை மூடப்பட்டது.
இதேவேளை, இன்று காலை எரிபொருளுக்காக வரிசையில் நின்ற ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரத்தில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இது இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த நபர் பல நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொண்டதாகவும், அண்மைய வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.