கட்சி நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த கால பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்பித்ததாகவும், எதிர்காலத்தில் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே அதன் நோக்கமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கூறவில்லை என்றும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரையும் அழைக்கின்றோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று (21) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினை காலம் தற்போது முடிவடைந்துள்ளதால், நாட்டுக்காக அனைவரும் தாமதமின்றி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
நாட்டிற்கு புதிய அரசியல் கோட்பாடு மற்றும் கலாசார அரசியல் பயணம் தேவை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, பழைய அரசியல் அமைப்பு தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடிமட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அபிவிருத்திக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம் தயாரில்லை எனவும் அதனை அனைவருக்கும் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தினை பிரதான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்றை நியமிப்பதாகவும், இந்த விடயங்களில் வெளிநாட்டு ஆலோசனை சேவைகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.