தொலைநோக்கு பார்வையற்ற பொருளாதார நடவடிக்கைகளை பின்பற்றி, முறையான முகாமைத்துவம் இன்றி செயற்பட்டு பொருளாதாரத்தை திவாலாக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். .
இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுக்கள் எந்த விதமான அடிப்படை உரிமை மீறல்களையும் உள்ளடக்கியதாக அமையாத நிலையில், மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு அமைச்சர்கள் கூட்டுப்பொறுப்புடையவர்கள் என்பதால், மனுக்களில் கூறப்பட்டுள்ளவாறு தமது வாடிக்கையாளர்களை மாத்திரம் குற்றஞ்சாட்டுவது நியாயமல்ல எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
எதிர்மனுதாரர்கள் தரப்பில் மேலதிக வாதங்கள் சமர்ப்பிப்பு எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.