கடவுச்சீட்டு வழங்கும் ‘ஒரு நாள்’ சேவையிணை எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் மேலும் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிப்பதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராணா தம்மிக்க பெரேரா இன்று தெரிவித்துள்ளார்.
மாத்தறை, கண்டி மற்றும் வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்களில் இந்த ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பெரேரா தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இலங்கையில் மேலும் ஐந்து கிளை அலுவலகங்களைத் திறக்க உத்தேசித்துள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் கூறுகையில், தற்போது கண்டி மற்றும் மாத்தறையில் உள்ள கிளை அலுவலகங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழங்கப்படுவதில்லை எனவும், குருநாகல் அலுவலகத்தில் தேவையான அச்சு இயந்திரம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இவ் காரணத்தினால் அப்பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள் கொழும்புக்குச் செல்வதாகவும், இவ்வாறு கொழும்பு அலுவலகத்திலிருந்து ஒரு நாள் சேவையை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்கள் அங்கு வரிசைகளில் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேலும் ஐந்து கிளை அலுவலகங்களை திறக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அமைச்சர் தம்மிக பெரேரா, தனது சொந்த நிதியில் யாழ்ப்பாணத்தில் முதலாவது அலுவலகத்தை திறந்து வைப்பதாக தெரிவித்தார்.
“டெண்டர்கள் அழைப்பதற்கு ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும். ஆகவே தனது சொந்தப் நிதியினைப் பயன்படுத்தி முதலாவது கிளை அலுவலகமாக யாழ்ப்பாணத்தில் திறப்பேன்” எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்காக எஞ்சியுள்ள அலுவலகங்களைத் திறப்பதற்கு நன்கொடைகளைப் பெறுவது அல்லது அதற்காக தனது சொந்தப் நிதியினைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்வதாக அமைச்சர் மேலும் கூறினார்.