கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டை விற்பனை செய்வோருக்கு எதிராக இன்று முதல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டது.
இதன் அடிப்படையில், வெள்ளை நிற முட்டை ஒன்றினுடைய அதிகபட்ச சில்லறை விலையானது 43 ரூபாவாகும். சிவப்பு நிற முட்டை ஒன்றினுடைய அதிகபட்ச சில்லறை விலையானது 45 ரூபா எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர், தயாரிப்பாளர், வழங்குநர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிகமாக வர்த்தகம் செய்யவோ, வழங்கவோ, வர்த்தகத்திற்கான சலுகையையோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்றும் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் கூறுகின்றது.
இதன்படி, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நோக்கில் நேற்று முதல் சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களை எச்சரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்று முதல் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையின் கீழ் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்வது தங்களது தொழிலின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கட்டுப்பாட்டு விலை வெளியிடப்படுவதற்கு முன், சந்தையில் ஒரு முட்டை 60 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தமை குறிப்பிட வேண்டிய விடையமாகும்.