ஹிஜாப் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹ்சா அமினி என்ற பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் 16 வயது சிறுவனும் அடங்குவதாகவும், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது
வெளிநாட்டு ஊடகங்களின்படி, இந்த அமைதியின்மை தலைநகர் தெஹ்ரான் உட்பட 20 க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கு பரவியுள்ளது.
வெளியிடப்பட்ட வீடியோக்கள் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு அழைப்பு விடுக்கும் கோஷங்களை எழுப்பும் போது பெண்கள் தங்கள் தலையில் அணிந்திருந்த முக்காடுகளை எரிப்பதைக் காட்டுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தற்போது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக அணிவகுத்து வரும் ஈரானின் துணிச்சலான பெண்களுக்கு அமெரிக்கர்கள் ஆதரவளிப்பதாகக் தெரிவித்துள்ளார்.
பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு மேற்குலக சக்திகள் விடுத்த கோரிக்கைகளை ஈரான் ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
வடமேற்கு நகரமான Zakes ஐச் சேர்ந்த 22 வயதான மஹ்சா அமினி என்ற குர்திஷ் பெண், மூன்று நாட்களுக்குப் பிறகு கோமா நிலையில் மருத்துவமனையில் இறந்தார்.
அவர் தனது குடும்பத்தினருடன் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், மேலும் பெண்கள் தலை, கை மற்றும் கால்களை தளர்வான ஆடைகளால் மறைக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்தார்.