பழைய பொருளாதார மாதிரியை இனி பயன்படுத்த முடியாது என்றும், புதுமையான முறையில் சிந்தித்து உலகளாவிய மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (05) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் வெளியீட்டு விழா மற்றும் புலமை விரிவுரையில் அதிதியாக விரிவுரை ஆற்றி உரையாற்றினார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரேரணைகள் நல்லவையாக இருந்தாலும் அல்லது தீயவையாக இருந்தாலும் அவற்றை யார் விரும்பினாலும் விரும்பாததாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமது பிரேரணைகளை எந்தவொரு தரப்பினரும் எதிர்க்கும் பட்சத்தில் அது தொடர்பில் கேள்வி எழுப்ப அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், நிலையான கடனைப் பெறுவதே மிக முக்கியமான விடயம் எனவும், இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் யாரிடமாவது ஆலோசனைகள் இருந்தால், அது இலகுவாக அமையும் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். அதற்கு செவிசாய்க்க வேண்டும்.மேலும், அந்த முன்மொழிவுகள் மீது பாராளுமன்றம் முடிவெடுக்க முடியும்.
எதிர்வரும் 6 மாதங்களில் நாம் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதை சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.