பிபில, தொடங்கொல்ல பிரதேசத்தில் இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பத்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிபில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15-16 வயதுடைய 10 மாணவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 மாணவர்களை லொறியில் ஏற்றிக்கொண்டு பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்விற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பிபில பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.