முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில் உள்ள இராணுவச் சாவடிக்கு அருகில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது குடிபோதையில் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராணுவ உப பிரிவினருக்கு அறிவிக்க படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்த படையினர் சென்ற இராணுவ ட்ரக் மீது கற்கள் மற்றும் போத்தல்களை வீசியதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
நிலைமையை கட்டுப்படுத்த படையினர் வானத்தை நோக்கி பல தடவைகள் சுட்டதாகவும் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கலவர சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவரை கைது செய்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தியுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.