இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தை நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சு அனைத்து நெற்செய்கையாளர்களுக்கும் நெற்செய்கையை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தது. இதன் காரணமாக அந்த விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
யூரியா உரம் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு கிடைத்ததன் பின்னர் விநியோகிக்கப்பட்ட விதம் தொடர்பில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யூரியா உரத்தை ஹெக்டேருக்கு 100 கிலோகிராம் என்ற விகிதத்தில் விநியோகிக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
யூரியா உரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அனைத்து விவசாயிகளின் நிலையங்களுக்கும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பூரண மேற்பார்வையின் கீழ் கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் சிலோன் உர நிறுவனம் ஆகியவற்றினால் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அவர்களின் பூரண உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அவர்களுக்கு கடமைகளில் நியமிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.