பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கும் பகல் இடைவேளையை மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை அரை மணித்தியாலமாக மட்டுப்படுத்துவதற்கும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதாகவும், அன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் நிதியாண்டுக்கான 2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்படாவிட்டால், ஆகஸ்ட் 30,31, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் குறித்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தை நடத்த குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.