கல்முனையின் மருதமுனையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பெரியநீலாவணை பகுதியின் மருதமுனை பிரதேசத்தினைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளினுடைய தாயான 54 வயதுடைய பெண்னொருவரே கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண் காணாமல் சென்றமை தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதேச பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் உதவி செய்யுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து பிரதேச மக்களும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று வியாழக்கிழமை(2) மாலை மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்டம் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியினுடைய பின்பக்கமாக இருக்கின்ற குளத்திலிருந்து உயிரிழந்த நிலையில் குறித்த சடலம் அடையாளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம். பதுர்தீன், மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்ரூன் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையில் பொலிஸாரினால் முன்னெக்கப்படுள்ளது.