நெருங்கிய நண்பன் என்ற வகையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை முறியடிப்பதற்கு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கை ஏற்கனவே பெற்றுள்ளது. தொடர்ந்தும் ஆதரவளிக்க இந்திய அரசாங்கமும் அரசியல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுக்குழு தெரிவித்துள்ளது.
கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வழங்கியது அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை மக்கள் சார்பில் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், புத்துயிர் பெறவும் இந்திய உதவித் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்தனர். இக்கட்டான காலகட்டத்திற்குப் பிறகு நாடு விரைவில் மீண்டு வரும் என்றும் தூதுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.