(எம்.என். எம். அப்ராஸ்,எம்.வை.அமீர்,யூ.கே.காலிதீன் அஸ்லம் மெளலானா)
நாடு பூராகவும் இன்று 156 வது பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையதின் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வின் ஆரம்பமாக பொலிஸ் சேவையின் போது நாட்டுக்காக உயிர் நீத்த பொலிசார்களுக்காக இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஆலோசனை சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்ற மைமுனா அஹமட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆயிசா சித்திக்கா,
கல்முனை கடற்படை நிலைய பொறுப்பதிகாரி அசோக வீரசேகர, லெப்டினல் எம்.கே. இர்ஷாட் கான் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா (ரசாதி) சாய்ந்தமருது பொலிஸ் பொது மக்கள் பாதுகாப்பு ஆலோசனை குழுவின் தலைவர் முன்னாள் அதிபர் எம்.எம் இஸ்மாயில் , செயலாளர் ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.ரபீக் உட்பட ஆலோசனை சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன், பொது மக்கள் பொலிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இன்று (3) திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு பூராகவும் பொலிஸ் வாரம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக இன்று பிற்பகல் அஸர் தொழுகையைத் தொடர்ந்து அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் உயிர் நீத்த பொலிஸாருக்கு துஆப் பிராத்தனையும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இன்று முதல் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் தொடராக கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மைதானத்தில் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது பொலிஸ் அணியினரை எதிர்த்து ஸாஹிறாக் கல்லூரி ஆசிரியர்களுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மத்திய நிலையத்தில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் ஆகியோருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்திய சேவை முகாம்,சாய்ந்தமருது கடற்கரை வீதி முழுவதும் கழகங்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் சிரமதானம், சாய்ந்தமருது பிரதேச பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 17 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த விஷேட தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல், சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் மற்றும் மையவாடிகளை அண்மித்த வீதியோரங்களில் மரநடுகை, சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக, பொலிஸ் நடமாடும் சேவையும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய சேவை முகாம் என்பன எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரசோதகர் எஸ். எல் சம்சுதீன் மேலும் தெரிவித்தார்,