வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவை இவ்வாரத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் இன்றும் இடைநிறுத்தப்பட்டது.
இவ்வாறு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலும் , ஏனைய கிளை அலுவலகங்களிலும் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை காணப்படுகிறது.
இந்நிலையில் வழமைக்கு மாறாக அதிகளவான சேவையின் காரணமாக கணனி தொகுதிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய தினம் கணனி தொகுதி பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் காரணமாக இன்றைய தினம் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதோடு , ஏனைய சேவைகள் நண்பகல் 12.30 மணியுடன் நிறுத்தப்பட்டன. இந்த அறிவிப்பையடுத்து அதிகாலை முதல் கடவுச்சீட்டினைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
குடிவரவு – குடியகல்வு திணைக்கள வளாகத்திலுள்ள பிரதான வீதியில் ஒன்றுதிரண்ட மக்கள் அந்த வீதியை மறித்து ‘எமக்கு கடவுச்சீட்டு வேண்டும்’ என்று கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் இரவிலிருந்தும், அதிகாலையிலிருந்தும் வரிசையில் காத்திருந்த மக்கள் இது தொடர்பில் தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்றும் விசனம் வெளியிட்டனர்.
எவ்வாறிருப்பினும் வழமைக்கு மாறாக தொடர்ச்சியாக முன்னெடுக்கட்ட அதிக சேவை காரணமாகவே கணனித் தொகுதிகள் கோளாரடைந்ததாகவும் , தொழிநுட்ப அதிகாரிகள் அதனை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதற்கமைய திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஏனைய சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று கண்டியில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்கள கிளை அலுவலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது தலைமை அலுவலகத்தில் அறிவிப்பையடுத்து குறித்த கிளை அலுவலகத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் கோபமடைந்த மக்கள் , நுழைவாயிலை திறந்து உட்செல்லவும் முற்பட்டனர். எனினும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதேவேளை மாத்தறையிலுள்ள கிளை அலுவலகத்திற்கு அருகிலும் இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.