அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில், பொது நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள், சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.
இந்த பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு, 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், தொடருந்து, பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், தொடருந்து திணைக்களத்தின் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள், இந்த நிர்வாக முடக்கலுக்கு ஆதரவளிக்கவில்லை என தொடருந்து போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
எனவே, இன்றைய தினத்திற்கான 275 தொடருந்து சேவைகளையும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம், இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டு, நேற்று நள்ளிரவு முதல் சகல சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தனியார் பேருந்து மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளன.
எனினும், அவசியத்தன்மை கருதி, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை வேலைநிறுத்தத்தில் இணைத்துக் கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக, இன்று மதியம் 12 மணிமுதல் ஒரு மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் வங்கிகள் நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவை வழங்குதாக இலங்கை வங்கி சேவையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தங்களது ஆதரவும் வழங்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் உறுப்பினர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் போராட்டத்தின்போது, வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களைத் தாங்கள் திருப்பி அனுப்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளா
போராட்டத்தில் ஈடுபடும் பணிக்குழாமினர், தன்னார்வமாக செயற்பட்டு, வைத்தியசாலைக்கு வரும் நோயாளருக்கு அவசியமான மருந்துகள், ஊசிகள் என்பனவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.