கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் முன்னுரிமை வழங்கப்படவேண்டியவைகள் மற்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று (27) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நீண்ட காலமாக நாடு எதிர்நோக்கும் முக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடைபெறும் க.பொ.த சாதாரண தரம் , எதிர்வரும் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மற்றும் நிறைவுசெய்யப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் பகுதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
தற்போதுள்ள தடைகளுக்கு மத்தியிலும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பலர் செயற்பட்ட விதம், சமூகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகள் காலத்தை வீணடிக்காமல் எதிர்காலத்திற்கான பாதையை மிகச்சரியாக வழிகாட்டும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட பாடப்பிரிவு எதுவாக இருந்தாலும் அனைத்து மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்தை கற்கக்கூடிய வகையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாடசாலை அபிவிருத்தி, சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.