மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் 10வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மறைந்த ரக்கர் வீரர் வசீம் தாஜுதீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடங்கிய குழுவினர் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது பாடசாலையிலிருந்து காலி முகத்திடல் வரை நினைவு ஊர்வலமொன்றை முன்னெடுத்தனர்.
மறைந்த வசீம் தாஜுதீனின் நினைவாக கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ‘கொட்டகோகம’ போராட்ட தளத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் அவர் இறந்து பத்து வருடங்கள் கடந்த பின்னரும் தொடர்ந்து முடங்கிக் கிடக்கின்றன.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது வசீம் தாஜுதீன் கொல்லப்பட்டார்.
அவர் கார் விபத்தில் இறந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடதக்கது.